அரை நெல்லி
முதலில் இந்த வருடம் முதன் முதலாய் காய்க்க துவங்கி இருக்கும் அரை நெல்லி மரம். இந்த மரத்தை பற்றி முன்பு ஒரு பதிவில் ஒரே ஒரு காய் மட்டும்
காய்த்தது பற்றி எழுதி இருந்தேன். அடுத்த முறை மூன்று காய் காய்த்தது. பிறகு ஒன்பது
காய் கொண்ட ஒரு கொத்து. இப்படி மூன்று சீசன் போய் விட்டது. என்னடா இது இப்படி
காய்க்குதே, ஒரு வேலை வச்ச கன்று சரி இல்லையோ, வெட்டி தான் போடணுமா என்று பேசி
கொண்டிருப்போம். இன்னும் ஒரு முறை பாப்போம், இல்லன்னா நீ காலி என்பது போல சில
மிரட்டல் எல்லாம் செய்து கொண்டிருந்தோம்.
இந்த முறை (நான்காவது காய்ப்பு) இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா
என்பது போல காய்த்து தள்ளி விட்டது. சில மரங்கள் இப்படி தான் முதலில் ஓன்று இரண்டு
காய்கள் என்று ஆரம்பித்து ஓரிரு பருவத்திற்கு பிறகு தான் முழு விளைச்சல்
கொடுக்கிறது. எங்க வீட்டு மாமரமும் இப்படி ஒரு காய் காய்த்து தான் ஆரம்பித்தது.
இந்த வருடத்தில் இருந்து அரை நெல்லியும் நிரந்தரமாய் எல்லா
பருவத்திலும் விளைச்சல் எதிர்பார்க்கும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
Season 1 |
Season 3 |
Season 4 |
கொடி அவரை மற்றும் சுரை
போன முறை கொடி அவரை போட்டு கொஞ்சமாய் (வெறும் இரண்டு கொத்து) பூ வந்து
விளைச்சல் எடுக்க முடியாமல் போனதை இங்கே எழுதி இருந்தேன். இந்த முறை கொடி அவரை
போடும் திட்டமே இல்லை. செடி அவரை என்று நினைத்து விதைத்தது கடைசியில் கொடி அவரையாக
இருந்திருக்கிறது. இந்த முறையாவது காய்க்குமா (இந்த முறை அதே விதை கிடையாது) என்று
பார்க்கலாம் என்று தோன்றியது. கொடி அவரை ஒன்றே பெரிய செடியாக வரும், இது மொத்தம்
பத்து செடி. கொடி தாங்குமா. ஒரு மூன்று செடிகளை மட்டும் பக்கத்தில் கொடிக்கு கயிறு
கட்டி திசையை மாற்றி விட்டு, மற்றதை பிடிங்கி விடாமல அப்படியே தரையோடு விட்டு விட்டேன்.
போன முறை சொதப்பியதற்க்கு இந்த முறை எக்கச்சக்க காய். ஒவ்வொரு
இலைக்கும் இடையில் பூ கொத்து கொத்தாய். வாரா வாரம் முக்கால் கிலோ வரை தவறாமல் பறிக்க
முடிகிறது. இந்த வருடம் முதல் கொடி அவரையில் முதல் அறுவடை..
அதே போல போன முறை மாடியில் Grow Bag-ல் போட்டு
சொதப்பிய சுரைகாயை இந்த முறை கீழே தரைக்கு மாற்றி இருந்தேன். செடி முதலில் இருந்தே
செழிப்பாய் வளர்ந்தது. பார்த்தாலே இந்த முறை நல்ல விளைச்சல் கொடுக்கும் என்று
தோன்றியது.
சுரைக்காய் செடிக்கு நிறைய பூச்சி தொல்லைகள் வருகிறது. சின்னதும்
பெரிதுமாய் புழுக்கள் நிறைய. தினமும் ஒரு முறை கவனமாக செடியை பார்க்க வேண்டிய
இருக்கிறது. பெரிதாய் வரும் புழுக்கள் இலைகளை மொத்தமாய் சாப்பிட ஆரம்பித்து
விடுகின்றது. அவைகளை நாம் எதையாவது வைத்து நீக்கி விட வேண்டியது தான். சின்ன
சின்னதாய் காய் பிஞ்சிகள் வரும் போதே அவற்றை சுரண்டி சாப்பிட்டு விடுகின்றன.
பிஞ்சிகள் ஓரளவுக்கு பெரிதாக இருந்தாலும் அப்படியே வெம்பி விடுகின்றன. இப்படி
கொஞ்சம் காய்கள் வீணாக போய்விட்டது. வேப்பெண்ணை கரைசல் தெளித்து விட்டாலும், நாம்
தினமும் பார்த்து நீக்கி விட்டால் தான் காய்களை காப்பாற்ற முடிகிறது. பெரிய
விளைச்சல் கிடைக்கவிட்டலும் வாரம் ஒரு காய் (ஒரு கிலோ அளவில்) என்று வீட்டுத்
தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது.
பூச்சி அரித்த பிஞ்சி |
பூச்சி அரித்து வெம்பி போன பிஞ்சி |
மொச்சை / பீன் (Bean)
இந்த செடியின் விதையை எதிர் வீட்டில் இருப்பவர்கள் கொடுத்தார்கள். மொச்சை
போல இருக்கும் என்றார்கள். எப்படி வருகிறதென்று பார்க்கலாம் என்று போட்டு
விட்டேன். ஊதா கலரில் பூத்து பெரிய புளியங்காய் சைசுக்கு கொத்தாய் காய்த்தது. அப்படியே
பொரியல் செய்யலாம் என்றார்கள். வைத்து பார்த்தோம், ரொம்ப மாவாக இருந்தது. இது
சரியாக என்ன செடி/காய் என்று தெரியவில்லை. நண்பர்களுக்கு விவரம் தெரிந்தால்
கூறவும்.
கொய்யா
கொய்யா மரத்தில் வழக்கம் போல இந்த முறையும் நல்ல காய் பிடிப்பு.
காயும் ஓரளவுக்கு பெரிதாக வந்திருக்கிறது. போன முறை நிறைய காய்கள் மேலே புள்ளிகள்
போல வந்து வீணாகி போனது. சரியாக என்ன பிரச்னை என்று தெரியவில்லை.
வழக்கம் போல கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு கரைத்து ஊற்றி விட்டு
பார்த்தேன். இந்த முறை ஒரு சில காய்கள் மட்டும் அப்படி வந்திருக்கிறது. மற்றபடி
நன்றாக வந்திருக்கிறது.
கொய்யா எல்லாம் ஆப்பிள் மாதிரி காஸ்ட்லி பழமாகி விட்டது. இங்கே
கோவையில் கிலோ 80 ரூபாய்க்கு வீங்கி போன ஹைப்ரிட் கொய்யா விற்கிறார்கள். தேடினாலும் இது
போல சிவப்பு நாட்டு கொய்யா கிடைப்பதில்லை.
அடிப்பகுதி கருத்து போன கொய்யா |
மாதுளையில் கூட சில காய்களில் புள்ளி வருகிறது, காயின் அடிப்பகுதி
கறுத்து/அழுகி போகிறது. நண்பர்களுக்கு விவரம் தெரிந்தால் கூறுங்கள்.
மாதுளை -கரும்புள்ளி |
மாதுளை - கறுத்து போன அடிப்பகுதி |
தை பட்டம் விதைப்பு
இப்போது அடுத்த விதைப்பு துவங்க நல்ல பருவம். இப்போது தோட்டத்தில்
எல்லா பாத்திகளும் ஹவுஸ்-புல்லா தான் போய்ட்டு இருக்கு. இருந்தாலும் நாற்று
எடுத்து விட்டால் சில முக்கிய காய்கறிகளை கோடையில் விளைச்சல் எடுக்க சரியாக
இருக்கும். பொதுவாக ஏப்ரல்-மே வெயிலுக்கு நல்ல விளைச்சல் எடுக்கலாம். ஜூன்-ஜூலை
வரை கத்தரி மாதிரி சில காய்கறிகள் நல்ல விளைச்சல் கொடுக்கும். பொதுவான காய்கறிகள்
கூட சேர்த்து, இந்த முறை தர்பூசணி போடலாம் என்று இருக்கிறேன். முன்பு ஒருமுறை
தானாய் வளர்ந்த செடியில் ஒரு காய் பறித்தோம். இந்த முறை திட்டமிட்டு விதைத்து
பார்க்கலாம் என்று இருக்கிறேன். சம்மரில் நம்ம வீட்டிலேயே தர்பூசணி வந்தால்
கலக்கல் தானே. உங்கள் தை பட்டம் விதைப்பு பற்றி கூறுங்கள். முடிந்தால் விதைகளை
பகிர்ந்து கொள்ளலாம்.