சீத்தாப்பழம் (Custard Apple), அவ்வளவாக கண்டுகொள்ளப் படாத ஒரு பழம். விதைகள் நிறைய இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ருசியிலும், அதில் அடங்கி இருக்கும் சத்துக்களிலும் மற்ற பழங்களை விட குறைந்தது இல்லை. ஊரில் எல்லோர் வீட்டிலும், தோட்டங்களிலும் இருக்கும். இதன் பூவையும் பறித்து சாப்பிட்டுக் கொண்டு திரிவோம்.
இதுவும் எங்க ஊர் சந்தையில் இருந்து வாங்கி
வந்த செடி தான். வைத்து ஒரு வருடத்தில் காய்க்க தொடங்கி விட்டது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில்
காய்க்கிறது. இந்த தடவை ஒரு 25 – 30 காய்
கிடைத்தது.
சீத்தா எளிதாக வளரும் ஒரு மரம். நோய் ஏதும்
தாக்காது. குறைந்த நீர் இருந்தாலும் நன்றாக வரும். தனி கவனம் எடுத்து ஏதும்
கவனிக்க வேண்டியதில்லை. எல்லா மரத்திற்கும் உரம் வைக்கும் போது இதற்கும் கொஞ்சம்
வைத்து விட்டால் போதும்.
நன்றாக பழுத்த பழத்தின் ருசியே தனி தான்.
ஆனால் ரொம்ப கனிந்து விட்டால் சிதைந்து விடும் அளவுக்கு அதன் தோல் மென்மையாகி
விடும். அதனால் தான் கடைகளில் கிடைக்கும் பழங்கள் காயாகவே பறித்து விற்பனைக்கு வருகிறது.
அவைகள் பழுக்கும் போது அவ்வளவு ருசி இருப்பதில்லை. இங்கே வீட்டு செடியில் நன்றாக
பழுக்கும் வரை விட்டு பறிப்போம். நன்றாக பழுத்து விட்டால் பழம் தானாகவே கீழே
விழுந்து சிதைந்து விடும். நன்றாக பழுக்கும் திரட்சி வந்ததும், ஒரு துணியை வைத்து
கிளையோடு கட்டி விட்டால் இதை தவிர்க்கலாம்.
எங்கள் வீட்டில் இருக்கும் பழ மரங்களில் ரொம்ப
பிடித்த பழம் இது தான். இந்த தடவை ஊருக்கு பொங்கலுக்கு ஊருக்கு போகும் போது
இன்னும் ஒரு செடி கொண்டு வந்து வைக்கலாம் என்று இருக்கிறேன்.