முன்பெல்லாம் “உணவே
மருந்து. மருந்தே உணவு”’ என்ற நிலை தான் இருந்தது.
ஊரில் எல்லாம் வாரா வாரம் ஞாயிறு சாயங்காலம் பார்த்தால் எல்லோர் வீட்டிலும் வேப்பிலை, இஞ்சி என்று ஏதாவது உரலில் போட்டு
இடித்து, நாம எங்கே விளையாண்டு கொண்டிருந்தாலும் பிடித்து ஒரு தம்ளர் குடித்தால்
தான் விடுவார்கள். கண்டங்கத்தரி, தூதுவளை என்று நிறைய செடிகள் எல்லோர் வீட்டிலும்
நிற்கும். காய்ச்சல், தலைவலி, சளி என்று எல்லாவற்றும் மருந்து செடி கொடிகளில்
இருந்தே வைத்திருப்பார்கள்.
அப்படி ஒரு செடி தான் சுண்டைக்காய். இது கத்தரி, கண்டங்கத்தரி செடி
இனம். இலையும் செடியும் ஓன்று போல தான் இருக்கும். இதன் காய் சிறுகசப்பு சுவை
உடையது. நாம் பொதுவாக வத்தக் குழம்புகளில் பார்க்கலாம். இது பொதுவாக எல்லா
கடைகளில் கிடைப்பது இல்லை.ஆனால் வீட்டில் வளர்ப்பது ரொம்ப எளிது.
இது செடி என்றாலும் சிறிய மரம் என்று சொல்லும் அளவுக்கு
பெரிதாக வளரும். அதனால் நடும் போதே நிறைய இடம் இருக்குமாறு பார்த்து நட வேண்டும். ரொம்ப
கவனிப்பு ஏதும் தேவை இல்லை. தண்ணீர் மட்டும் பாய்த்தால் போதும். நோய் தாக்குதல்
ஏதும் இருப்பதில்லை.
ஒவ்வொரு இலைக்கும் இடையில் கொத்தாய் பூக்கள் பூக்கும். ஒரு
கொத்தில் 50 காய்கள் வரை வரும்.
இதனால் ஒரு செடியிலேயே எக்கச்சக்கமாய் காய் பறிக்கலாம். எங்கள் தேவைக்கு போக நிறைய
அக்கம் பக்கம் இருப்பர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு ஒரு செடியே நிறைய காய்க்கிறது.
நாங்கள் இதை வைத்து கார குழம்பு செய்வதுண்டு. மோரில் ஊற வைத்து
வத்தலும் போடலாம். ஊரில் எல்லாம் சுண்ட வத்தல், முறுக்கு வத்தல் எல்லாம் சாப்பாட்டில்
தவறாமல் இருக்கும்.
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து
அதிகம் நிறைந்துள்ளன. சமைத்து சாப்பிட்டால் இரத்தம்
சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்; வயிற்றுப்புண்
ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
சுண்டைக்காய் செடியில் கொத்துக்கொத்தாய் சிறிய காய்கள் பார்க்க
ரொம்ப அழகு. இங்கே தோட்டத்தில் படம் எடுக்க எனக்கு ரொம்ப பிடித்த ஒரு செடி. என்
தோட்டத்தில் இருந்து சில படங்கள்,
சுண்டைக்காயை வைத்து நிறைய பேச்சு வழக்கு உண்டு. 'சுண்டக்கா
பய" "சுண்டக்கா சைஸ்ல இருந்துக்கிட்டு ஏன்னா வரத்து வரான்"
என்று, சிறிய என்று பொருளில் பேச்சு
வழக்கு உண்டு. சரி, சுண்டைக்காயை கொஞ்சம் close-up வைத்து பெரிசா
எடுத்தா எப்படி இருக்கும் என்று நினைத்து எடுத்த இரண்டு படங்கள் கீழே.